கொல்கத்தாவில் நேற்று நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பார்வையாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் என முதல்வர் மம்தா பானர்ஜி பேச வரும்போது கோஷமிட்டதால், கோபமடைந்த அவர் பேசுவதை தவிர்த்து அமர்ந்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜி பேச வரும்போது ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டது அவமதிப்புக்குரியது என திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், ஜெய் ஸ்ரீராம் கோஷமம் எழுப்பியதில் என்ன தவறு, மம்தா பானர்ஜியின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது என்று பாஜக விமர்சித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு அரங்கில் நேற்று நேதாஜி சுபாஷ்சந்திரபோஷின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் தினகர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி பேசவரும்போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலர், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இதனால் மம்தா பானர்ஜி பேசுவதில் இடையூறு ஏற்பட்டது. அப்போது மம்தா பானர்ஜி பேசுைகயில் ‘ அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்கிறேன்.
இது அரசு சார்ந்த நிகழ்ச்சி, அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்துவிட்டு, அவரை அவமானப்படுத்துவது சரியல்ல. நான் இந்தக் கூட்டத்தில் பேசப் போவதில்லை. ஜெய் பங்களா, ஜெய் ஹிந்த்’ எனத் தெரிவித்து அமர்ந்துவிட்டார்.
மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் எம்.பி. ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ மம்தா பானர்ஜி மரியாதைக்கும், தகுதிக்கும் ஒப்பானவர். அவருக்கு யாரும் கண்ணியத்தை கற்பிக்க முடியாது. யாரையும் புனிதப்படுத்தவும் முடியாது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்துத் தெரிவித்துள்ளன. காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் ‘ சில கோஷங்களை சில எழுப்பி முதல்வர் பேச வரும்போது அவரை அவமதித்துள்ளார்கள்.
ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அரசு விழாவில் எழுப்பப்பட்டு, மம்தா பேசவரும்போது அவரை மட்டும் அவமானப்படுத்தவில்லை, முதல்வரையே அவமானப்படுத்தியுள்ளார்கள். ஒரு பெண்ணை பொதுவெளியில் அவமானப்படுத்தியுள்ளார்கள். அரசியல்ரீதியாக நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைக் கண்டிக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிமான் போஸ் கூறுகையில் ‘ மம்தாவுக்கு நடந்த சம்பவம் மாநிலத்துக்கே அவமானம். அரசு நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகளாக மாறாமல் இருக்க இனிமேல் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்’எனத் தெரிவித்தார்.
பாஜக தரப்பில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகையில் ‘ ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதில் என்ன தவறு இருக்கிறது. யாரும் ஏதும் சொல்லவில்லை. எதற்காக மம்தா பொறுமையை இழந்தார். இதுஅவரின் மனநிலையைக் காட்டுகிறது, ஒருதரப்பினரை சமாதானம் செய்யும் அரசியல் வெளிப்பாடு’எனத் தெரிவித்தார்.
The post ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா பானர்ஜி… மோடி முன்னிலையில் நடந்த சம்பவம்… எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு…! appeared first on தமிழ் செய்தி.