தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அன்றில் இருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது வரை டாஸ்மாக் கடை இயங்காததால் தமிழக அரசுக்கு 2000 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு முன் கடைசி இரண்டு நாட்கள் சுமார் 850 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் தமிழக அரசு முழு முடக்கத்திற்கு பிறகு மதுபானங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு இதுபோன்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுவின் விலையை உயர்த்தி புதுச்சேரி போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மதுபானங்களின் விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தக்கூடாது என மதுகுடிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.