முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்க முதல்வர் பழனிசாமி கடந்த 2018 மே 7-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.50.80 கோடியில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.
நினைவிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், ஜனவரி 27-ம்தேதி அவரது நினைவிடம் திறக்கப்படும் என்று தமிழக அரசு கடந்தவாரம் அறிவித்தது.
இந்நிலையில், நாளை காலை11 மணிக்கு நடைபெறும் விழாவில்ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து உரையாற்றுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவைத் துணைத் தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவுச் சின்னம் மட்டுமல்லாது, 50,422 சதுரஅடி பரப்பளவில் ஜெயலலிதாவின் வாழ்க்கை, அரசியல் சாதனை வரலாறுகள் அடங்கிய அருங்காட்சியகம், அறிவுத் திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி, நீர் தடாகங்கள், சுற்றுச்சுவர் என்று கலை நுணுக்கங்களுடன் பல்வேறு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜெயலலிதா நினைவிடத்துக்கான செலவு ரூ.79.75 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாளை சென்னை வருகின்றனர்.
The post ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி நாளை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். appeared first on தமிழ் செய்தி.