இந்திய நாட்டில் – மத்திய மாநில அரசுகள் மற்றும் இந்தியர்கள் 72 வது குடியரசு தினத்தை (26.01.2021) கொண்டாடுவது பெருமைக்குரியது, மகிழ்ச்சியளிக்கிறது. மக்களாட்சி மலர்ந்ததும், இந்திய அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்திற்கு வந்ததும், குடியரசு தினம் கொண்டாடப்படுவதும் இந்திய திருநாட்டிற்கு வரலாற்றுச்சிறப்பு மிக்கது.
குறிப்பாக நம் நாடு பெற்ற விடுதலையின் மூலம் பொது மக்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழ்வதற்கு நாட்டை ஆளுகின்ற மத்திய மாநில ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனும் தங்களது பொறுப்பை, கடமையை உணர்ந்து நல்வழியில் செயல்பட வேண்டும். கடந்த 12 மாத காலமாக இந்தியா உட்பட உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் தற்போது நம் நாட்டில் படிப்படியாக குறைந்தும், தடுப்பூசி செலுத்தப்பட்டும், அச்சம் தவிர்க்கப்பட்டும் வருகின்ற இவ்வேளையில் இந்த 72 வது குடியரசு தினமானது நம் நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த மக்களும் கொரோனாவின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு நலமுடன், வளமுடன் வாழவும், நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, நாடு முன்னேற்றப்பாதையில் செல்லவும் வழி வகுக்கும்.
மேலும் 72 வது குடியரசு தினத்தை கொண்டாடும் மத்திய, மாநில அரசுகள் – மக்கள் நலன், நாட்டின் பொருளாதாரம், முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்க வேண்டும்.
எனவே ஜனவரி 26, 2021 அன்று இந்திய நாட்டின் – 72 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகின்ற இத்தருணத்தில் த.மா.கா சார்பில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வேற்றுமையில் ஒற்றுமையாக, நாட்டு நலன் கருதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post 72-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து appeared first on தமிழ் செய்தி.