கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்காக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.இதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்கை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் பிரீத்தி படேல் கையெழுத்திட்டதும் அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்’சில சட்ட நடைமுறைகள் இருப்பதால் எப்போது நாடு கடத்தப்படுவார் என்பதை உறுதியாக கூற முடியாது’ என இந்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரிட்டன் கூறியுள்ளது.
இதற்கிடையே பிரிட்டனில் உள்ள சொத்தை மல்லையா விற்றுள்ளார். அந்த பரிவர்த்தனையில் கிடைத்துள்ள பணத்தை பிரிட்டன் நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. அதை விடுவிக்கக் கோரி மல்லையா சார்பில் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையின்போது மல்லையாவை நாடு கடத்துவது குறித்த நடவடிக்கைகளின் தற்போதைய நிலை பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு ‘மல்லையா பிரிட்டனிலேயே தொடர்ந்து தங்கியிருப்பதற்காக மாற்று வழியில் முயற்சி நடந்து வருகிறது’ என அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ‘தற்போதைக்கு மல்லையாவுக்கு உள்ள கடைசி வாய்ப்பு அடைக்கலம் கோருவதுதான். ‘ஆனால் நாடு கடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்குக்கு முன்பாகவே அவர் மனு அளித்திருந்தால் தான் அது ஏற்கப்படும்’ என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
The post இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க விஜய் மல்லையா மாற்று வழியில் முயற்சி appeared first on தமிழ் செய்தி.