சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஒம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த முதல்வருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
கிரிதரன் பட்டாச்சாரியார் தலைமையில் 14 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒதி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோவில் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது 3 கழுகுகள் கோவில் கோபுரத்தின் மேல் சுற்றி வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியோடு கோபுர தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post ஒம் காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம் appeared first on தமிழ் செய்தி.