தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்திருந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜுன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைத்தார். அதேபோல விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கேரளா சென்றார். கொச்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதுதவிர பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உங்களுடன் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று கேரளா மற்றும் இந்தியாவின் வளர்ச்சியைக் கொண்டாட நாம் இங்கு வந்துள்ளோம். பல வளர்ச்சி திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை சேதத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்" என்றார்.
கேரளாவில் சுற்றுலா துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொச்சியில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள உள்ள சர்வதேச கப்பல் முனையம் மாநிலத்தின் சுற்றுலா துறையை நிச்சயம் மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.