சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.4,486 கோடி செலவில் நிறைவுற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
பின்பு விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்;-பாரத தேசத்தின் தவப்புதல்வர். பாமர மக்களின் சேவகர் பிரதமர் மோடி. அவரை போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது. தமிழகத்தின் நலன் நாடும் தன்னிகரில்லா தலைவர் பிரதமர் மோடி. சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழகம் மூன்று முறை பெற்றுள்ளது. சிறந்த ஆளுமைக்கான மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்றுள்ளது.
அதிமுக அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்து வருகிறார். 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு பிரதமருக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவின் புகழை, நினைவை போற்றுவதற்காக பிரதமர் ஏராளமான விஷயங்களை செய்துள்ளார். மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது என ஓபிஎஸ் பேசியுள்ளார்.