நாளை பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லை முதல் சென்னை வரை பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிக்க தினகரன் தலைமையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து இருமுறை டிஜிபியிடம் தமிழக அமைச்சர்கள் புகார் அளித்திருந்தனர்.
அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அள்த்திருந்தார். இதனால், அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்து இருப்பதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பதற்றத்தில் இருக்கும் சிலர் எத்தகைய பாதகத்தையும் செய்திட துணிந்தவர்கள் என்பதால், சசிகலா அவர்களுக்கு நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துகொள்ள வேண்டும். தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை ராணுவக் கட்டுப்பாட்டோடு சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படத்திட வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அதற்கான ஏற்பாடுகாளை செய்திட வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் முறைப்படி கடைப்பிடித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்“ என்றுள்ளார்.