Type Here to Get Search Results !

தமிழகத்தில் 20,21ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பொன்மலை, விரலிமலை, கொடைக்கானல், திருச்சி, உதகமண்டலம், பந்தலூர் உள்ளிட்ட பல ஊர்களில் மழை பெய்துள்ளது.
இன்று முதல் 22ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென்மேற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 44 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் புதுவை காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
20,21ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 22ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 44 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.