எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக முதலமைச்சராக நான் இருந்தபோது எனது தலைமையிலான அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. மேலும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், சென்னையில் காவல் ஆணையர்கள், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உரிய நடவடிக்கை மேற்கொண்டு முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் ஆதரவோடு நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் தினக்கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடிதிருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதார சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி போன்றவைகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது
தற்போது தினந்தோறும் 33 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிப்படைகிறார்கள்.
அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் தினக்கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடிதிருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வெளிமாநில தொழிலாளர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை எளிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.
எனவே, கடந்த ஆண்டு எனது தலைமையிலான அம்மாவின் அரசு மேற்குறிப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை மற்றும் சிறப்பு உணவு தொகுப்பினை வழங்கியது போல் உடனடியாக 2000 ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.