தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில், நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, கொரோனா நிலவரம், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்க ஊக்குவிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே தற்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்வர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மேலும், ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கொரோனா கட்டுப்படுத்த முடியும். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.