உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடமிருந்து 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் தேஸ்கான் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர பகதூர் சிங், கோயில் கட்டுமானத்திற்கான தனது பங்களிப்பாக ஒரு கோடியே 11 லட்சத்து, 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கான (ரூ.1,11,11,111) காசோலையை வழங்கினார்.
மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ,குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநில கவர்னர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளனர்.