Type Here to Get Search Results !

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று வீசக்கூடும்

 

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயல் அதிதீவிர வலுப்பெற்றுள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கினாலும் சில மாவட்டங்களில் பூமி குளிர மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமநாதபுரம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26ஆம் தேதி முதல் முதல் வருகின்ற 29ஆம் தேதி வரை கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வருகின்ற 29ஆம் தேதி வரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 முதல் 27ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

26ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கம் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 25 முதல் 29 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் – சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.