பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.
இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்காக டிசம்பர் 15 முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதற்கிடையே போலியான இணையதளம் ஒன்று, ஜேஇஇ தேர்வுக்காக மாணவர்களை முன்பதிவு செய்யக் கூறி, ஆன்லைன் வழியாகக் கட்டணத்தையும் பெறுவதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஜேஇஇ மெயின் 2021 தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” jeeguide.co.in என்ற போலியான இணையதளம், தேர்வுக்காக மாணவர்களை முன்பதிவு செய்யக் கூறி அழைப்பு விடுத்துள்ளது. இந்த இணைய முகவரியில் போலியான ஆன்லைன் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, இணையம் வழியாகக் கட்டணத்தைப் பெறுவதும் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக info@jeeguide.co.in என்ற மெயில் முகவரியும் 9311245307 என்ற தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தேர்வர்கள் யாரும் நம்ப வேண்டாம்.
இதுபற்றி மாணவர்களும் ஆசிரியர்களும் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைமில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு grivance@nta.ac.in என்ற இ-மெயில் முகவரியைத் தொடர்புகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.