கொரோனாவை ஒழிக்கும் விதமாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதிவழங்கியது. இதனை தொடர்ந்து, இரண்டு தடுப்பூசிகளும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2வது கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட 27 கோடி முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் கட்கோபர் பகுதியில் பாஜ.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், கொரோனா உருவபொமமையை எரித்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு நடனமாடியதுடன், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றினர்.