Type Here to Get Search Results !

21 திமுக எம்எல்ஏ குட்கா வழக்கு விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீசும் ரத்து

 


கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி சட்டபேரவையில் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்ததாக திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு சபை உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது. மேலும், தவறுகளை சரி செய்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையின் போது, குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு சென்றதாக திமுக தரப்பில் வாதிடப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்தனர். 

இந்நிலையில், இடைக்கால தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவை  செயலாளர், உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயண வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார். அதில், குட்கா வழக்கு விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீசும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.