சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக நடிகை குஷ்புவை பாஜக நியமித்தது. இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீனவர் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவியும், நடிகை குஷ்புவும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சி.டி. ரவி பேசுகையில், “பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எம்எல்ஏகூட கிடையாது. ஒரு எம்பியும் கிடையாது. என்றாலும் தென் மாநிலங்களில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் குஷ்புவுக்கு வாக்களிக்க நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று குஷ்பு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சி.டி. ரவியின் இந்தக் கேள்வி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு போட்டியிடுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கருணாநிதி 3 முறை வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், இந்த முறை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாறு என்று கூறப்படுகிறது. எனவே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்புவும் உதயநிதி ஸ்டாலினும் மோதுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.