நாளை தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் அடிக்கல் நாட்டுவதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். இதனால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வரவேற்பதற்காக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், ஊடகப்பிரிவு மாநில தலைவர் பிரசாத்,முன்னனி தலைவர்கள் சுமதி வெங்கடேசன்,லோகநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன்,
நெடுஞ்சாலைத் திட்டம், மெட்ரோ ரயில் சேவை திட்டம் என பல்வேறு திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து விட்டு, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சட்டத்திட்டங்களை அமல்படுத்தி விட்டு, சென்னைக்கு வருகை தரக்கூடிய பாரத பிரதமர் மோடி அவர்களை மிக பிரம்மாண்ட முறையில் வரவேற்பதற்கு தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமரை வரவேற்பதற்காக 50000 பாஜக தொண்டர்கள் ஒன்றுகூடி வரவேற்கபோகிறோம் என்றார்.
மேலும் அதிமுக சார்பில் முன்னணித் தலைவர்கள் தொண்டர்கள் என அவர்களும் வரவேற்க உள்ளனர், அவர்களுடன் சேர்ந்து பாஜகவும் மிக பிரமாண்ட முறையில் வரவேற்பு அளிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசியல் குறித்து எதுவும் பேச வாய்ப்பில்லை என்றும், முழுக்க முழுக்க அரசின் நிகழ்ச்சிக்காக மட்டுமே பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருகிறார் எனவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி முன்னிலையில் பிரபலங்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுபோன்று இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.