தருமபுரி அருகே சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக நடைபெற்றது.
இதில், தருமபுரியில் 130 காளைகள் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 500 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஐந்து சுற்றுகளாக 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காளைகளை அடக்க முயலும் மாடுபிடி வீரர்கள்.
இப் போட்டிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை திறந்துவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏனைய மாடுகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.
வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவித்து, அதன் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இப் போட்டிகளை காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இவர்கள் அமருவதற்கு பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்து 600 காவலர்கள் ஈடுபட்டனர்.
தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பிரவேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), ஜல்லிக்கட்டு பேரவை கௌரவத் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.