தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் வசிக்கும் முனிப் சோஃபி நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் தரப்பினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''போலீஸார் நீண்ட நாட்களாகத் தேடிவந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரகசியப் பணியாளர் முனிப் சோஃபி இன்று கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டிற்கு தப்பிச்செல்ல இருந்த நிலையில் அவர் பிடிபட்டார்.
இந்நபர் ஏற்கெனவே கடந்த ஆண்டு குல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி வலீத் பாய் என்பவருக்காக ரகசியமாகப் பணியாற்றி வந்தவர்''.
இவ்வாறு காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.