பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, 2012ல், 'டாடா சன்ஸ்' குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது கவுரவத் தலைவராக உள்ளார். பல்வேறு, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து, அவற்றில் முதலீடு செய்து வருகிறார்.'இளைஞர்களை ஊக்குவித்து வரும் ரத்தன் டாடாவுக்கு, பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்' என, சமூக வலைதளத்தில், சிலர் பதிவிட்டனர். இதையடுத்து, இதை ஒரு பிரசாரமாக, இயக்கமாக, சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.இதற்கு பதிலளித்து ரத்தன் டாடா, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:எனக்கு விருது வழங்கப்பட வேண்டும் என, சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களை, உணர்வுகளை மதிக்கிறேன்.
அதே நேரத்தில், இந்த பிரசாரத்தை நிறுத்தும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நான் இந்தியன் என கூறுவதை, பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சிறிய அளவில் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.