திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க இயலாது என திமுகவின் முதன்மைச் செயலர் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கே.என். நேரு கூறியது:
ஜபேக் நிறுவனம் என்பது எங்களுக்கு ஆலோசனை வழங்கி, தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் சில திட்டங்கள் வைத்துள்ளனர். திமுக தலைவருடன் பேசிக் கொண்டிருக்கிறன்றனர்.
இந்தச் சூழலில், ஐபேக் நிறுவன குழுவினருடன் பிரச்னை இருப்பதால்தான் திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு தள்ளிப் போகிறது என்பது தவறான கருத்து.
தொகுதி வாரியாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், வரும் 15-ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அதன்பிறகே பிப்.16-ஆம் தேதி திருச்சி மாநாடு குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும்.
திருச்சி மாநாடு திறந்தவெளி மாநாடாக நடைபெறும். எங்களது பணி என்பது, மைதானத்தை தயார் செய்தல், குடிநீருக்கு ஏற்பாடு செய்தல், சாலை அமைத்தல், உணவு கடைகள் அமைத்தல், 50 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட மாநாட்டு ஏற்பாடு பணிகள் மட்டுமே. தலைவர்தான் மாநாடு குறித்தும், மாநாட்டில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது மற்றும் இதர நிகழ்வுகளை அறிவிக்க வேண்டும்.
இந்த மாநாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கான முன்னோட்ட மாநாடாக அமையும்.
அதிமுக, திமுக இல்லாத அணியை மக்கள் நீதி மய்யம் அமைக்கும் என கமல்ஹாசன் கூறுகிறார்.
எனவே, திமுகவுடன் கூட்டணி என்பது அமையாது என்று கே.என்.நேரு கூறினார்.