மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளார் சசிகலா. இதனால் 6 ஆண்டுகளுக்கு சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிட முடியாது.
ஆனால் சிக்கிம் மாநிலத்தில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தமாங், தேர்தலில் போட்டியிடவும் முதல்வராகவும் தேர்தல் ஆணையம் அனுமதித்தது. இதனை முன்னுதாரணமாக கொண்டு சசிகலா தேர்தலில் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்று ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அதிமுகவை மீட்டெடுப்பது எங்களுடைய ஒரே நோக்கம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்திற்கு வருகை ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
தப்பித்தவறி திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், நாங்கள் இதே ரோட்டில் இருப்போம், ஆனால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியும். சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.