மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில், ஒருபோதும் மக்களின் விருப்பத்தை மீறவோ அல்லது நம்பகமான தேர்தலின் முடிவை மாற்றவோ முயற்சிக்கக்கூடாது என தெரிவித்த பைடன் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார்.
முன்னதாக மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.