இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான 'சவுரி சவுரா' சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன.
இன்று முதல் 2022 பிப்ரவரி 4 வரை, 75 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாங்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த உ.பி. மாநில அரசு நடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில் இன்று சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
சவுரி சவுரா சம்பவத்தில் வீரமரணம் அடைந்தவர்களை பற்றி துரதிர்ஷ்டவசமாக வரலாற்றில் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அவர்களை பற்றி அதிகம் பேசியிருக்க வேண்டும். அவர்களுடைய ரத்தம் நமது தேசத்தின் மண்ணில் கலந்துள்ளது. நம்மை ஊக்குவித்து வருகிறது.
சவுரி சவுரா சம்பவம், காவல் நிலையம் மீது தீ வைத்ததுடன் நின்றுவிடவில்லை. இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வரும் விஷயம் பெரியது.
அந்த நெருப்பு காவல் நிலையத்துடன் நின்று விடாமல் பொதுமக்களின் இதயங்களிலும் மூண்ட தீ ஆகும்.
நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகள் உள்ளனர். சவுரி சவுரா போராட்டத்திலும் விவசாயிகள் பங்கெடுத்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில், விவசாயிகள் சுயசார்புள்ளவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.