பிரதமர் மோடியும், கனடா பிரதமர் ட்ரூடோவும் புதன்கிழமை தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அதில் விவாதித்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் பற்றியும் கனடா பிரதமர் பேசியுள்ளார். கனடா தரப்பில் வெளியான அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய தரப்பு அறிக்கையில் அது இல்லை.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் தீவிரமடைந்த டிசம்பர் மாதத்தில், கனடா பிரதமர் அப்போராட்டத்தை ஆதரித்தார். இது உள்விவகாரம் என உடனடியாக வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்தது.
இந்நிலையில் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பை வெள்ளியன்று நடத்தினார். அதில், விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்துக்கு ஏற்ற பேச்சுவார்த்தை பாதையை தேர்ந்தெடுத்த இந்தியாவின் முயற்சிகளை கனடா பிரதமர் பாராட்டியதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள், வளாகங்களுக்கு பாதுகாப்பு வழங்க தனது அரசுக்கு பொறுப்பு உள்ளது என்று ட்ரூடோ தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
கனடா தரப்பில் வெளியான அறிக்கையில், ஜனநாயகக் கொள்கைகள், சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள், முக்கியமாக பிரச்னைகளை பேசி தீர்ப்பதில் கனடா மற்றும் இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது என கூறியுள்ளனர்.