வாரணாசியை சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ வெளியானது தொடர்பாக பெலூப்பூர் காவல் நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி புகார் அளித்தார்.
அதில் தன்னுடைய வாட்ஸ் ஆப் குரூப்பில் பிரதமரை அவதூறாக விமர்சித்து வீடியோ ஒன்று வந்ததாகவும் அதன் பின்னர் 5 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் கொண்ட அதே வீடியோவை யூ டியூபிலும் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனக்கு 8500 க்கும் மேற்பட்ட மிரட்டல் போன் கால்கள் வந்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பிரதமர் மீதான அவதூறு வீடியோ வெளியிட்டது தொடர்பாக 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இதில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் ஒருவர். இவர் மட்டுமல்லாமது இந்தியாவின் தலைமை அதிகாரி சஞ்சய் குமார் குப்தா உள்ளிட்ட மேலும் 3 கூகுள் அதிகாரிகளின் பேரும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை ஆய்வு செய்த காவல்துறையினர் இந்த புகாரில் தொடர்பு இல்லாததால் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் பெயரை எப்.ஐ.ஆர்-ல் இருந்து நீக்கினர். சஞ்சய் குப்தா உள்ளிட்ட 3 பேரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டது.
பிரதமர் குறித்து அவதூறு வீடியோவை உருவாக்கிய காசிபூரை சேர்ந்த இசையமைப்பாளர்கள், ரெக்கார்டிங் ஸ்டூடியோ மற்றும் இசை நிறுவனம் ஒன்று உட்பட பிறர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது ஐடி சட்டம், மிரட்டல், சதித்திட்டம், அமைதிக்கு பங்கம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.