”குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும்,” என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.
வேலுாரில், சிவசக்தி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் சார்பில் நடந்த, தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது: காங்கிரஸ் – தி.மு.க., ஆட்சியில்தான், விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொண்டனர். விவசாய நிலங்கள், கட்டடங்களாக மாற்றப்பட்டன. இப்போது, விவசாயிகள் நலன் குறித்து பேசுகின்றனர்.
விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாகத்தான், தி.மு.க., இருந்தது. தி.மு.க.,வின் குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும். பிரதமர் மோடி, அவரது ஆட்சி மீது, பழி சொல்ல முடியாத நிலையில், பா.ஜ.க – அ.தி.மு.க., கூட்டணியை மதவாத கூட்டணி என்கின்றனர்.
ஆனால், பா.ஜ.க ஆட்சியில் தான், விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள், சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்கும் நிதி, மக்களுக்காகத் தான்; குடும்பத்துக்காக அல்ல.இவ்வாறு, அவர் பேசினார்.