தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், 2வது நாளாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு புகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். தேர்தல் பரப்புரை முடிந்த பிறகு சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வர உள்ளார்.
இந்நிலையில், தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 என்ற எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் சேலம் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 2 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் இது புரளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த தொடர்பு எண்ணை வைத்து யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை திருப்பூரில் போலீசார் கைது செய்ததாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.