குஜராத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநகராட்சித் தேர்தலில் 474 இடங்களில் பாஜக 409 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
“நன்றி குஜராத்! மாநிலம் முழுவதுமான மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வளர்ச்சி அரசியல் மற்றும் நல்லாட்சி மீதான மக்களின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பாஜகவை மீண்டும் நம்பியதற்கு மாநில மக்களுக்கு நன்றி. குஜராத்துக்கு சேவை ஆற்றுவது எப்போதுமே பெருமைக்குரியது.
குஜராத்தில் இன்றைய வெற்றி மிகவும் சிறப்பானது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் கட்சி இதுபோன்ற மாபெரும் வெற்றியைப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்க ஒன்று. சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் பரவலான ஆதரவைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கான குஜராத் இளைஞர்களின் ஆதரவு மகிழ்வாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார் மோடி.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 இடங்களில் வென்றுள்ளது.