சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள வி.கே. சசிகலாவின் தமிழக வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமான ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் தனிமையிலும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சசிகலா இன்று (திங்கள்கிழமை) தமிழகம் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜமாதாவே வருக, சின்னம்மாவே வருக, தியாகத் தலைவியே வருக என்பது போன்ற வாசகங்களுடன் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. டிவிட்டரில் அவரை வரவேற்கும் விதமாக சின்னமாவை வரவேற்கும் தமிழகம், ராஜமாதா போன்ற ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.