காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை எதிர்த்து 2001-ம் ஆண்டில் சேப்பாக்கத்தில் போட்டியிட்ட வேட்பாளரும் காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வகித்து வரும் கல்லூரியில் படித்த 80 மாணவர்கள் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மோசடி புகாரில் சிக்கிய கே.எஸ்.அழகிரி தாமாகவே முன்வந்து கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காமராஜருக்கும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரும் ராகுல் காந்திக்கும் மரியாதை செய்யும்விதமாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
தலைவர் என்பவர் கட்சிக்கான மரியாதையைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற பதவியை விட்டு அவர் விலகுவதுதான் சிறந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் மகனை தவிர மற்ற காங்கிரஸ் வேட்பாளரள் எல்லாம் சொந்த தொகுதியில் நின்று வெற்றி பெறவில்லை. சொந்த தொகுதியிலேயே 20 ஆயிரம் வாக்குகள்கூட வாங்க முடியாதவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். திமுகவுக்கு சுமையாகத்தான் கே.எஸ்.அழகிரி இருக்கிறார்.
கே.எஸ்.அழகிரியின் மோசடி புகாரை தேர்தல் நேரத்தில் எதிர்கட்சியினர் பெரிதுபடுத்த செய்வார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல் ஆகும். எனவே அதிமுகவும் பாஜகவும் இதைப் பெரிதுப்படுத்தி பிரச்சாரம் செய்வார்கள். எனவே அழகிரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று நெல்லை கண்ணன் தெரிவித்தார்