தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வரகூடாது என்பதே நம் நோக்கம் எனவும், பாஜகவினர் போர் வீரர்களாக நாம் செயல்பட வேண்டும் எனவும் கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் பாஜக தமிழ்மாநில தலைவர் எல்.முருகன் பேசியுள்ளார். சிங்காரவேலரின் 162வது பிறந்தநாளை யொட்டி சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சிங்காரவேலன் திருவுருவ படத்திற்கு பாஜக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணையமைச்சர் வி. கே. சிங் மற்றும் பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பிறகு சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் உள்ள பாஜகவின் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களுடன் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர், கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் தி.நகர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய எல். முருகன்,தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதே நம் நோக்கம் அதற்காக போர் வீரர்களாக நாம் செயல்பட வேண்டும்.
வரக்கூடிய தேர்தலில் அனைவரின் பங்களிப்பு மிக அவசியம்.தேர்தல் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தேர்தல் நம் கட்சிக்கு முக்கியமான வளர்ச்சியை தரும் என்றார். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
பாஜக எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது பேச்சுவார்த்தையின் போது தான் முடிவாகும். புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு நாராயணசாமி தான் காரணம் பாஜகவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற எல்.முருகன் கூறினார்.