கூட்டத் தொடரை தொடக்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வேளாண் மண்டலத்தை அறிவித்தவர் முதல்வர் பழனிசாமி. கரோனாவை எதிர்கொள்ள அரசு இயந்திரங்களை திறம்பட ஒருங்கிணைத்த பெருமை முதல்வரையே சாரும்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்துக்கான செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள தொடர்ந்து வலியுறுத்துவோம்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் நீட்டிப்பு வழித்தடப் பணிகளை பிப்ரவரி இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 19.95 லட்சம் டன் அரிசி நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக பருப்பு, எண்ணெய் வழங்க ரூ.5,402 கோடி கூடுதல் மானியத்தை அரசு ஏற்றுக் கொண்டது. அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுபடுத்தப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.