தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் ஜனநாயக திருவிழா களைகட்டியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிமுகவினர் போட்டியிட உள்ள 171 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து வெளியிட்டனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. அந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, திமுக போட்டியிடும் 173 பிளஸ் 14 தொகுதிகளையும் சேர்த்தால், உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது.
திமுக சார்பில் 173 தொகுதிகளில் களம் காண உள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி பார்த்தால் 14 தொகுதிகளில் பாஜகவை திமுக வேட்பாளர்கள் நேரடியாக எதிர்கொள்கின்றனர். அதிமுக கூட்டணியில் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், மொடக்குறிச்சி, ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, உதகமண்டலம், திருவையாறு, திருநெல்வேலி, தளி, தாராபுரம் , காரைக்குடி ஆகிய தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலின் படி பார்த்தால் 1. ராமநாதபுரத்தில் – காதர் பாட்சா, 2.விருதுநகரில் – ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், 3.மதுரை வடக்கு – தளபதி, 4.நாகர்கோவிலில் – சுரேஷ் ராஜன், 5.நெல்லையில் – லட்சுமணன், 6.திருவையாறில் – துரை சந்திரசேகரன், 7.திட்டக்குடியில் – சிவி கணேசன், 8.ஆயிரம் விளக்கில் – டாக்டர் எழிலன், 9.துறைமுகத்தில் – பி.கே.சேகர், 10. மொடக்குறிச்சியில் – சுப்புலட்சுமி ஜெயதீசன், 11.அரவக்குறிச்சியில் – இளங்கோ, 12. தாராபுரத்தில் – கயல்விழி செல்வராஜ், 13.திருக்கோவிலூரில் – க.பொன்முடி உள்ளிட்ட பாஜக தொகுதிகளில் திமுக தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளது.