மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 7-ம் தேதி நாகர்கோவில் வருகிறார். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுடன், மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளதால் தேசிய தலைவர்களின் பார்வை கன்னியாகுமரி பக்கம் திரும்பியுள்ளது. ராகுல்காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கன்னியாகுமரிக்கு வருகைதந்து, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 7-ம் தேதி நாகர்கோவில் வருகிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வருகிறார்.
அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், நாகர்கோவில் பீச் ரோட்டில் இருந்து வாகனத்தில் ரோடு ஷோ மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வேப்பமூடு சந்திப்பு வரை அமித் ஷாவின்வாகன பிரச்சாரம் நடைபெறுகிறது.
பின்னர், வடசேரி உடுப்பி ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர், திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்கிறார். அமித் ஷாவின் குமரி வருகையை முன்னிட்டு நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்தியஉளவுப்பிரிவினர் மற்றும் டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் நாகர்கோவிலில் முகாமிட்டு, அமித் ஷா செல்லும் வழித்தடங்கள், பிரச்சார பாதை, ஆலோசனை கூட்டம் நடைபெறும் ஓட்டல் ஆகியவற்றில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.