தலையே போனாலும் தேமுதிக தலைகுனிந்து போகாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் பேசியுள்ளார்.
தேமுதிக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அந்தக் கூட்டணி தற்போதும் தொடர்வதாக, இரு கட்சிகளின் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, எவ்வித உடன்பாடும் இன்னும் எட்டப்படவில்லை. இதனால், தேமுதிக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பெரம்பலூரில் நடந்த தேமுதிகவின் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் தகுதி நமது கட்சிக்கு உண்டு.
அமையவுள்ள புதிய சட்டப்பேரவையில் தலைவரின் குரல் நிச்சயம் ஒலிக்கும். கூட்டணி குறித்து தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் நினைப்பதைத் தான் நாங்கள் நடத்திக் காட்டுவோம்.
எந்தச் சூழ்நிலையிலும் தேமுதிக தலைகுனிந்து போகாது. நிச்சயம் அரசியல் அரங்கில் நமக்கான இடத்தை நாம் பெற்றே தீருவோம்” என்றார்.
இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நேர்காணல் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.