மே 2ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது என பரவிய செய்தி தவறானது என மறுத்துள்ளார்.
மேலும் தலைமைத் தேர்தல் அதிகாரி பேசியதாவது, வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்யப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
தலைமைச் செயலாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.