80 கோடி மக்களுக்கு ரூபாய் 26,000 கோடி மதிப்பில் உணவு தானியங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள மத்திய அரசிற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: கொரானா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாவண்ணம் தேசிய அளவில் திட்டமிடல், போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால் இந்தியா முழுவதும் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
மே, ஜூன் மாதங்களில் இந்த உதவியை மக்கள் பெற முடியும். உதாரணமாக மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குடும்ப அட்டைக்கு 15 கிலோ உணவு தானியங்கள் கூடுதலாக கிடைக்கும். உடனடி நிவாரணமாக இத்தகைய உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற தடுப்பு பாதுகாப்பு முறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.