காலமான சின்ன கலைவாணர் விவேக் சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திடீர் மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்(59) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சின்ன கலைவாணர் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்ன காலைவாணர் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.
சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, நெகிழித் தடை, கரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இளைஞர்களுக்கு ஊக்கமளித்து எடுத்துக்காட்டாக திழந்தவர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக் இறப்பு, மிகப்பெரிய இழப்பு. அவர இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.