உ.பி., மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதித்த தன் கணவனை காப்பாற்ற, அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி ஆக்ஸிஜன் அளித்த போதும், கணவரின் உயிரை மனைவியால் காப்பாற்ற முடியவில்லை. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், உ.பி.,யில் கணவரின் உயிரை காக்க போராடிய பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆட்டோ மூலம், சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரேணு அழைத்து வந்திருந்தார்.
ரவியின் உடல்நிலை மேலும் மோசமாக, மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆட்டோவில், தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஆக்ஸிஜன் அளித்திருக்கிறார். ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த ரவி உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்கி கொள்ள முடியாத ரேணு கதறி அழுதார். அவர் கணவனை காப்பாற்ற போராடிய புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. அது காண்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.