சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை, முக ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்து சென்றது தொடர்பாக உரிமை மீறல் குழு நோட்டீஸ் வழங்கியது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி இந்த குட்கா பொருட்களை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்றனர்.
இது உரிமை மீறல் செயல் என்று கூறி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அந்த நோட்டீசை ரத்து செய்தது.
மேலும் விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீஸ் அனுப்ப விரும்பினால் அனுப்பலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மு க ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு மீண்டும் புதிய நோட்டீசு அனுப்பியது. இத்தனையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டமன்ற செயலாளர் தொடர்ந்த மேல்முறையீட்டில், உரிமைக்குழு தாக்கல் செய்த மனுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.