சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு அவரது நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜனங்களின் கலைஞனான ‘சின்ன கலைவானர்’ நடிகர் விவேக்கின் மறைவையறிந்து அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.