மாடர்னா தடுப்பூசி இரு டோஸ்களை செலுத்திக் கொண்டவுடன் 12 வயது முதல் 17 வயதினருக்கு 100 சதவீதம் திறம்படவுள்ளது என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் சார்பில் mRNA-1273 என்ற தடுப்பூசி கொரோனாவை தடுக்க செலுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுவர்களுக்கு மாடர்னாவின் இரு டோஸ்கள் தடுப்பூசி போட்டவுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து 100 சதவீதம் பயனை அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாடர்னாவின் தலைமை நிர்வாக இயக்குநர் ஸ்டீபன் பன்சல் கூறுகையில் 12 வயது முதல் 17 வயது வரையில் உள்ள 3,732 சிறுவர்களில் 3 இல் 2 பங்கு பேருக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டன.
அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. முதல் டோஸ் செலுத்திக் கொண்டால் 93 சதவீதம் திறம்பட செயல்படுகிறது. இரு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளும் சிறுவர்கள் ஓராண்டு கண்காணிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட வயதினருக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தில் அனுமதி கோருவோம் என்றார் பன்சல்.
12 வயது முதல் 15 வதயு வரையிலான சிறுவர்களுக்கு பைசரின் பயோ என் டெக் தடுப்பூசி போடுவதற்கு அண்மையில் ஒப்புதல் கிடைத்தது. பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் 6 மாதக் குழந்தை முதல் 11 வயது குழந்தைகள் வரை தடுப்பூசியை சோதனை ஓட்டம் செய்து வருகின்றன.