பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும், அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புகாரை தன்னுடைய 94447 72222 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது செல்போன் எண்ணிற்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, மேலும் மூன்று தனியார் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக,வேறு சில பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவிகளும் மின்னஞ்சலில் புகாரளித்துள்ளனர்.
அதன்படி, சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மற்றும், ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளுடன் சேர்த்து, செனாய் நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் , தாளாளர், அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.