கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து நாளை புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த யாஸ் புயல் அதிதீவீர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிதீவீர புயலாக மாறும் யாஸ், வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26-ம் தேதி மாலையில் கரையை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அப்போது மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம், ஒடிசா மாநில கடற்கரையோரம் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.தமிழகத்துக்கும் யாஸ் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என கூறியுளளது. வருகிற 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறித்தியுள்ளது.
யாஸ் புயல் எதிரொலியாக தமிழகத்தின் எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் புதுவை, காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.