Type Here to Get Search Results !

மக்களுக்கு இதை செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்…. ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்

 
ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உடனே திருப்பிக் கொடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு. காவல்துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது, சட்டப்படி நடப்பவர்க்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும், சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சம் என்ற பக்கம் தான் தெரிய வேண்டும் என்பார் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 8-5-2021 ஆம் தேதியிட்ட அரசாணையின்படி 10-5-2021 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசிய பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாகனங்களில் சென்றுவர இப்பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இ- பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் அனுமதிப்பதற்கு, முன் பதிவு செய்யாமல் அனுமதியின்றி சட்டத்தை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு காவல் துறையினருக்கு முழு உரிமை உண்டு. இதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் இ-பதிவு முறையை பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றைத் திரும்பப் பெறக்கோரி வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக திருவெற்றியூரில் சாலை மறியல் செய்து வருவதாகவும் பத்திரிக்கை செய்தி வந்திருக்கிறது. அவர்கள் மறியல் செய்வதற்கான மற்றொரு முக்கியமான காரணம், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பது தான். அவர்களுடைய கோரிக்கைகளில் நிச்சயம் நியாயம் உள்ளது,
 ஏற்கனவே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து உள்ளவர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த உதிரிபாகங்கள் சமூக விரோதிகளால் களவாடப்படுமேயானால், அந்த உதிரிபாகங்களை புதிதாக வாங்க பல ஆயிரம் ரூபாய்களை மேலும் அவர்கள் செலவழிக்க வேண்டி வரும். இதன் மூலம் அவர்கள் மேலும் கடனாளியாகக் கூடிய சூழ்நிலை உருவாகும், காவல்துறையினருக்கும் தற்போதுள்ள வேலை பளுவில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேதம் ஏதும் இல்லாமல் இருக்கின்றனவா என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல், எனவே வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்டப்படி நடப்பவர்களுக்கு நண்பர் என்பதை நிலைநாட்டும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் இ-பதிவு முறை அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமையாளர்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.