பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜாவை தரம் தாழ்ந்து விமர்சித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஈஷா யோகா மையம் மற்றும் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார். ஆனால், திடீரென, இனி ஜக்கி வாசுதேவ் குறித்து எந்தகருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என அவர் யூடர்ன் அடித்தார். இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்தும், கிண்டலும் அடித்து வந்தனர். அந்த வகையில், பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜாவும் தனது பங்கிற்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம், எச். ராஜா குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது :- ஒரு தகுதி உள்ள மனிதன் பேசுகின்ற கருத்து, விமர்சனம், கோரிக்கை என்று கேளுங்கள் பதில் சொல்கிறேன். ஆனால், வெறி பிடித்தநாய் குறைக்கும் போதெல்லாம், அதற்கு கருத்து கேட்டால் என்னால் பதிலளிக்க முடியாது. நான் அமைச்சர் எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும். நாய் குறைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது, என்று காட்டமாக பதிலளித்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு தலைவரை விமர்சிப்பது என்றால் அரசியல் நாகரீகத்துடன்தான் விமர்சிக்க வேண்டும் என்றும், இதுபோன்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில், அவர் இருக்கும் கட்சியின் எண்ணம், குணமும் தானே அவருக்கும் இருக்கும் என்று பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், தான் வகிக்கும் பதவியை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.