டெல்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளார்.
கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு 12% வரை வரி விதிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் சிகிச்சைக்குப் பயன்படும் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அனைத்தும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, வரி விதிப்பை ரத்து செய்வது, மிகை வரியை செலுத்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று கூறி வருகிறது.
எனவே இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜிஎஸ்டியால் இழப்பை சந்தித்துள்ள மாநிலங்களுக்கு நிதி அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.